ஸகாத் பற்றிய கேள்விகளும்- பதில்களும்

கேள்வி:

05. ஸகாத் கடமையாகுவதற்குறிய நிபந்தனைகள் யாவை?

பதில்:-

1. ஸகாத் கொடுப்பவர் முஸ்லிமாக இருக்க வேண்டும்.

2. சுதந்திரமானவராக இருக்க வேண்டும்.

3. ஸகாத் கொடுக்க வேண்டிய பொருட்கள் (அதற்கென நிர்ணயம் செய்யப்பட்ட)அளவை அடைந்திருத்தல்.

4. அவைகள் அவரின் கைவசம் காணப்பட வேண்டும்.

5. அவைகளுக்கு ஒரு வருடம் பூர்த்தியாக வேண்டும். ஆனால் பழங்கள், வித்துக்களில் வருடம் பூர்த்தியாக வேண்டிய அவசியம் இல்லை.

பார்க்க:-

“مجموع فتاوى ورسائل العثيمين” (16/18)

கேள்வி:

06. இறை நிராகரிப்பவர்களான காபீர்கள் மீது ஸகாத் கடமையாகுமா?

பதில்:-
“குப்ர்” எனப்படும் இறை நிராகரிப்பு என்பது இஸ்லாத்திற்கு எதிர் மாறான ஒன்றாகும்.
இறை நிராகரிப்பாளர் மீது ஸகாத் கடமையாக மாட்டாது. ஏனெனில் ஸகாத் என்பது (சொத்துக்களை) தூய்மைப்படுத்தும் ஒரு அமலாகும்.

அல்லாஹ் கூறினான்:-

(( (நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து அவர்களை தூய்மைப்படுத்தும் தர்மத்தை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.)) (அல்குர்ஆன் : 9:103)

👉இறை நிராகரிப்பாளன் அழுக்கான ஒருவனாவான். கடல் நீரின் மூலமாகவோ, பூமி நிறைய தங்கத்தின் மூலமாகவோ அவன் (தன்னை) சுத்தப்படுத்தினாலும் பாவமீட்சியில் ஈடுபடும் வரையில் அவனுடைய (குப்ர் என்ற) அழுக்கு தூய்மையாக மாட்டாது.

அல்லாஹ் கூறினான்:-
(( அவர்களுடைய தானங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று (அல்லாஹ்) தடுத்திருப்பதற்குக் காரணம் யாதெனில்; அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் ))
(அல்குர்ஆன் : 9:54)

ஆனாலும், இவைகளை செய்யாததன் காரணமாக மறுமையில் விசாரிக்கப்படுவான்.

அல்லாஹ் கூறினான்:-
(( உங்களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது?” (என்று கேட்பார்கள்.
அவர்கள் (பதில்) கூறுவார்கள்: “தொழுபவர்களில் நின்றும் நாங்கள் இருக்கவில்லை.
“ஏழைகளுக்கு உணவும் அளிக்கவில்லை.
“(வீணானவற்றில்) மூழ்கிக்கிடந்தோருடன், நாங்களும் மூழ்கிக்கிடந்தோம்.
)) (அல்குர்ஆன் : 74:42-44)

👉தொழுகையை விட்டதற்கும், ஏழைகளுக்கு உணவு அளிக்காததற்கும் அவர்களுக்கு தண்டனை இல்லையெனில், நரகில் நுழைவதற்கான காரணங்களை அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.

பார்க்க:-

الشرح الممتع للشيخ ابن العثيمين (2/456)

 

இவை அனைத்தும் அஷ்ஷைக் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்-உஸைமீன் -ரஹிமஹுல்லாஹ்- அவர்களின் மார்க்கத் தீர்வில் இருந்து பெறப்பட்டவைகளாகும்.

அல்லாஹ் இதன் மூலம் முஸ்லிம்களுக்கு பல பிரயோசனங்களை வழங்குவானாக.

தமிழில்:-

அபூ அப்திர்ரஹ்மான் (அப்பாஸி,மதனி)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply