இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா?

இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார்களா?

———————————-

 

உலக முடிவின் போது அடியார்கள் மரணிப்பதற்கும் பின்னர் அனைவரும் எழுப்பப்படுவதற்குமாக இரண்டு ஸூர் ஊதப்படும்.

 

அல்லாஹுதஆலா கூறுகின்றான் : மேலும், ஸுர்(குழல்) ஊதப்படும், பின்னர் வானங்களில் இருப்பவர்களும், பூமியில் இருப்பவர்களும்_ அல்லாஹ் நாடியவர்களைத் தவிர_ மூர்ச்சித்துச் சித்தமிழந்து விழுந்து) விடுவார்கள், பிறகு அதில் மறுமுறை ஊதப்படும், அப்போது அவர்கள் (அல்லாஹ்வின் கட்டளைகளை எதிர்) பார்ப்பவர்களாக (யாவரும் உயிர் பெற்று) எழுந்து நிற்பார்கள்.

(அல்குர்ஆன் : 39:68)

 

ஸூர் ஊதும் வானவர் இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் என்று அதிகமான அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

 

இது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஏகோபித்த முடிவு என்று இமாம் குர்துபீ ரஹிமஹுல்லாஹ் குறிப்பிட்டுள்ளார். (அத்தத்கிரா : 1/324)

 

இக்கருத்து ஏகோபித்த முடிவாகும் என ஹலீமீ என்ற அறிஞர் குறிப்பிட்டதாக இப்னு ஹஜர் ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்றார். (பத்ஹுல் பாரீ : 11/378)

 

ஆனால், சில அறிஞர்கள் இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தான் ஸூர் ஊதுவார் என்பது ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

 

அஷ்ஷெய்ஹ் அப்துல் முஹ்ஸின் அல்அப்பாத் ஹபிளஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிடும் போது “ஸூர் ஊதுபவர் இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் என்பதை உறுதியான ஹதீஸ்களில் நான் பெற்றுக்கொள்ளவில்லை. யாருக்காவது அது பற்றிய உறுதியான ஹதீஸ் கிடைத்தால் அவர் எமக்கு எத்திவைக்கட்டும்” என்று கூறுகின்றார்.

 

ஸூர் ஊதும் வானவர் இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் தான் என்பது தொடர்பாக வரக்கூடிய ஒரேயொரு ஹதீஸ் தபராணியில் பதிவாகியுள்ளது. இது பலவீனமான செய்தி என பூஸீரி, இப்னு ஹஜர் போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

 

(அல்மதாலிபுல் ஆலியா : 3013)

 

(இத்ஹாஃபுல் ஹைரதில் மஹரா : 1/187)

 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 

அஸ்கி அல்கமி

10.07.2023

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply