بسم الله الرحمن الرحيم
தொழுகையில் கண்களை மூடலாமா?
தொழுகையில் கண்களை மூட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் மூடிக்கொள்வது குற்றமில்லை. உதாரணமாக ஒருவர் தொழுகையை ஆரம்பித்து தொழும்போது, முன்னால் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தால் அல்லது தொழுகையின் கவனத்தை திருப்பக்கூடிய ஏதாவது ஒன்றை அவர் கண்டு கொண்டால் அவர் அச்சமயத்தில் கண்களை மூடுவது குற்றமாகாது.
காரணமின்றி கண்களை மூடுவது, இன்னும் அது இறையச்சத்தை ஏற்படுத்தும் என்று கருதுவது ஷைத்தானுடைய ஊசலாட்டங்களில் ஒன்றாகும். ஏனெனில், இவ்வாறு கண்களை மூடுவது வெறுக்கத்தக்கதாகும். மேலும், இச்செயல் நெருப்பை கண்மூடி வணங்கும் மஜூஸிகளின் நடைமுறையாகும் என்றும் சொல்லப்படுகிறது.
எனவே, தொழுகையில் கண்களை மூடுவதை பின்வருமாறு விவரிக்கலாம்:
ஒரு நிகழ்வு ஏற்பட்டு அதை உங்களது பார்வை பின்தொடர்வதன் மூலம் உங்களது தொழுகையை விட்டும் உங்களது கவனம் திரும்பி விட்டால் கண்களை மூடுங்கள்.
அதற்கு மாறாக, கண்களை மூடினால் இறையச்சம் ஏற்படும் என்ற நோக்கத்தில் மூடுவது தவறாகும்.
பதிலளித்தவர்: அஷ்ஷெய்ஹ் முஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்)
நூல்: அல்லிகாஉஷ் ஷஹ்ரீ (40)
தமிழில்: அஸ்கி அல்கமி