ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன?

கேள்வி:

ஜமாத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவரின் சட்டம் என்ன?

பதில்:

அல்ஹம்துலில்லாஹ்..

இரவு தொழுகையைப் போல உபரியான(நஃபில்) தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை.
பர்ளான தொழுகையில் பெரும்பாலும் குர்ஆனை பார்த்து ஓதுவதின் பால் தேவையில்லாத காரணத்தினால் அது மக்ருஹ் ஆகும். பர்ளான தொழுகையில் தேவை ஏற்பட்டால் குர்ஆனை பார்த்து ஓதுவதில் எந்த தவறும் இல்லை.
இமாம் இப்னுல் குதாமா (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்முக்னீ பாகம் 1 பக்கம் 335 ல் பதிவுசெய்கிறார்கள்.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்:

ஒருவர் இரவுத் தொழுகையில் மக்களுக்கு குர்ஆனை பார்த்து ஓதி தொழுகை நடத்துவதில் தவறில்லை. அவர்களிடம் பர்ளான தொழுகையில் ஓதலாமா? என்று கேட்கப்பட்டது. இல்லை. இதில் எந்த ஒரு செய்தியையும் முன்னோர்களிடமிருந்து கேள்விப்படவில்லை.

காழி (ரஹ்) சொல்கிறார்:

பர்ளான தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவது மக்ரூஹ் எனவும் உபரியான தொழுகையில் குர்ஆனை மனனம் செய்யவில்லையெனில் பார்த்து ஓதுவதில் தவறில்லை. அவர் குர்ஆனை மனனம் செய்திருந்தால் அதுவும் மக்ரூஹ்தான் என்று சொல்கிறார்.

இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்களிடத்தில் ரமலானில் தொழுகை நடத்துவதற்காக குர்ஆனை பார்த்து ஓதலாமா? என்று கேட்கப்பட்டது. இமாம் அஹ்மத் (ரஹ்) அவர்கள் அதற்கு நிர்பந்தம் ஏற்பட்டால் ஓதலாம் என்றார்கள்.

இப்னு ஹாமித் அவர்கள் மூலம் எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. குர்ஆனை பார்த்து ஓதுவதில் பர்ளும் நபிலும் சமமே என்று கூறியிருக்கிறார்கள்.

அபூபக்கர் அல்அஸ்ரிம் அவர்களும் இப்னுஅபீதாவூத் அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்கள் மூலமாக அறிவித்த செய்திதான் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுதவதற்கு ஆதரமாக இருக்கிறது.

இமாம் ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடம் ரமலானின் இரவுத் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுபவர் பற்றி கேட்கப்பட்டது. அதற்கவர்கள் நம்மைவிட சிறந்தவர் (நபித்தோழர்) கள் ஓதியிருக்கிறார்கள் என்று பதிலளித்தார்கள்.

தொழுகையில் குர்ஆனை அதிகம் ஓத கேட்பதற்கும் நீண்ட நேரம் நின்று தொழுகுவதற்கு மாத்திரம் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
குர்ஆனை மனனம் செய்தவர் பார்த்து ஓதுவதற்கு மக்ரூஹ் என சொல்லப்படுகிறது. காரணம் அவர் தொழுகையில் உள்ளச்சத்தை விட்டு திருப்பும் செயலில் ஈடுபடுகிறார். மேலும் ஸஜ்தாவின் இடத்தை பார்ப்பதைவிட்டும் அவருடைய பார்வை தேவையில்லாமல் வேறு இடத்தை நோக்கி பார்ப்பதிலும் ஈடுபடுகிறார். பொதுவாக பர்ளான தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் இப்போது அந்த தேவையில்லை. (சுருக்கம்)
இமாம் நவவீ (ரஹ்) அவர்கள் தன்னுடைய அல்மஜ்மூஃ பாகம் 2 பக்கம் 74 ல் பதிவு செய்கிறார்கள்.

ஒருவர் குர்ஆனை மனனம் செய்திருந்தாலும் மனனம் செய்யாவிட்டாலும் அவர் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதினால் அவருடைய தொழுகை வீணாகாது.
இதே கருத்துதான் நம்முடைய கருத்தும் இமாம் மாலிக் இமாம் அபூயூசுப் இமாம் முஹம்மத் இமாம் அஹ்மத் ஆகியோரின் கருத்தும்.

இமாம் இப்னுபாஸ் (ரஹ்) அவர்களிடம் ஐவேளை தொழுகையில் குறிப்பாக ஃபஜ்ர் தொழுகையில் ஏனெனில் ஃபஜ்ர் தொழுகையில் குர்ஆனை நீண்ட நேரம் ஓதவேண்டியதிருக்கிறது. குர்ஆனை நீண்ட ஓதும்போது ஓதுவதில் தவறு ஏற்படுமோ அல்லது மறதி ஏற்படுமோ என்று பயப்படுகிறார். ஆகையால் இமாம் குர்ஆனை பார்த்து ஓதலாமா? என்று கேட்கப்பட்டது.
குர்ஆனை மனனம் செய்யாதவருக்கு தராவீஹ் தொழுகையில் குர்ஆனை பார்த்து ஓதுவதற்கு அனுமதி உள்ளது போல தேவை ஏற்பட்டால் பர்ளான தொழுகையிலும் பார்த்து ஓதுவது கூடும். ஆயிஷா (ரலி) அவர்களின் அடிமை தக்வான் அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு ரமலானில் குர்ஆனை பார்த்து ஓதி தொழுகை நடத்தியிருக்கிறார்கள். இதை இமாம் புகாரி (ரஹ்) அவர்கள் தன்னுடைய ஸஹீஹ் அல் புகாரியில் தஃலீக்காக அறிவிப்பை உறுதிபடுத்தி அறிவித்திருக்கிறார்கள்.

ஃபஜ்ர் தொழுகையில் நீண்ட நேரம் ஓதுவது சுன்னத்தாகும். இமாம் முஃபஸ்ஸல் சூராக்களை மனனம் செய்யவில்லையெனில் அவர் குர்ஆனை பார்த்து ஓதுவது அனுமதியாகும். அவர் குர்ஆனை மனனம் செய்யவேண்டும். அதற்கு முயற்சி செய்யவேண்டும். குர்ஆனை பார்த்து ஓதாத அளவிற்கு முஃபஸ்ஸல் சூராக்களையும் அவர் மனனம் செய்து கொள்ளவேண்டும். முஃபஸ்ஸல் சூராக்கள் சூரா காஃபிலிருந்து குர்ஆனின் இறுதிவரை இருக்கிறது. யார் குர்ஆனை மனனம் செய்வதற்கு முயற்சி செய்கிறாரோ அவருக்கு அவருடைய காரியங்களை எளிதாக்குவான்.

وَمَن يَتَّقِ اللَّهَ يَجعَل لَهُ مَخرَجًا

யார் அல்லாஹ்வை பயப்படுவாரோ அவருக்கு ஒரு தக்க வழியை உண்டாக்குவான்.

﴿وَلَقَد يَسَّرنَا القُرآنَ لِلذِّكرِ فَهَل مِن مُدَّكِرٍ﴾

இந்தக்குர்ஆனை எளிதாக்கியிருக்கிறோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

நூல் : இப்னு பாஸ் அவர்களின் அல்மஜ்மவு பதாவா பாகம் 11 பக்கம் 117.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

தமிழாக்கம்:ஷெய்க் யூசுப் பைஜி(இஸ்லாமிய அழைப்பாளர் கடையநல்லூர்)

https://islamqa.info/ar/answers/65924/

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d