அல்குர்ஆன் ,ஸுன்னாஹு-வின் அடிப்படையில் பிரயாணத் தொழுகையின் சட்டங்கள்  – தொடர் – 03

பிரயாணத் தொழுகை – தொடர் 03

 

 

சுருக்கித் தொழும் கால எல்லை:

——————————————————

 

ஒருவர் பயணத்திலிருக்கும் காலம் முழுவதும் சுருக்கித் தொழ முடியுமா, அல்லது குறிப்பிட்ட சில நாட்களுக்கு மட்டுமே சுருக்கித் தொழ முடியுமா என்பது தொடர்பிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

 

ஒருவர் வெளியூரில் தங்குவதாக தீர்மானித்துக்கொண்டால் அவர் சுருக்கித் தொழுவதற்கான கால எல்லையாக பல அறிஞர்கள் பல்வேறு காலவரையறைகளை விதித்திருக்கிறார்கள்.

 

– சில அறிஞர்கள் நான்கு நாட்களுக்கு மாத்திரமே ஒரு பயணி சுருக்கித் தொழ முடியும், அதற்கு மேலும் பயணியாக இருந்தால் சுருக்கித் தொழ முடியாது, நான்கு றக்அத்துகளையும் பூரணமாக தொழ வேண்டும் என்றும், இதற்கு ஆதாரமாக, நபியவர்கள் தனது ஹஜ்ஜின் போது மக்காவில் நான்கு நாட்கள் மட்டுமே தங்கியிருந்தமையையும் அந்த நான்கு நாட்களும் சுருக்கித் தொழுததையும் குறிப்பிடுகிறார்கள்.

 

– மற்றும் சில அறிஞர்கள் 15 நாட்களுக்கு சுருக்கித் தொழ முடியும் என்றும்

 

– மற்றும் சிலர் 19 நாட்கள் என்றும் வரையறுக்கிறார்கள்.

 

இவ்வாறு பத்துக்கு மேற்பட்ட கருத்துகள் அறிஞர்களிடம் காணப்படுகின்றன. இத்தகைய கருத்துகளை இமாம் நவவி (றஹ்) அவர்கள் விரிவாக கலந்துரையாடுகிறார்கள் (பார்க்க : ‘அல்மஜ்மூஃ ஷர்ஹுல் முஹத்தப்’ ).

 

இவ்வாறு கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கு காரணம் குர்ஆனிலோ, ஸுன்னாவிலோ சுருக்கித் தொழுவதற்கான கால எல்லை வரையறுக்கப்படவில்லை என்பதேயாகும். நபியவர்கள் மேற்கொண்ட பல்வேறு பயண நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே மேற்படி கருத்துகளை அறிஞர்கள் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

 

ஒரு பிரயாணி எவ்வளவு காலத்திற்கு சுருக்கித் தொழ வேண்டும் என்பதை நபியவர்கள் வரையறுத்துக் கூறவில்லை என்பதால், ஒருவர் தனது சொந்த ஊரிலிருந்து வெளியாகி மீண்டும் தனது ஊருக்கு திரும்பி வரும் வரை – எத்தனை நாட்களாயினும் – சுருக்கித் தொழ முடியும் என்ற கருத்தை வேறு சில அறிஞர்கள் முன்வைக்கிறனர். இக்கருத்தே வலுவான ஆதாரம் கொண்ட கருத்தாகத் தெரிகிறது.

 

ஏனெனில் நபிகளார் தமது வாழ்நாளில் பல பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்கள். எத்தனை நாட்கள் அவர்கள் பயணியாக இருந்தார்களோ அத்தனை நாட்களும் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் கிடைக்கின்றன :

 

1. ஹஜ்ஜுக்காக மக்காவுக்கு சென்ற போது அங்கே நபியவர்கள் 10 நாட்கள் தங்கியிருந்தார்கள். அத்தனை நாட்களும் சுருக்கித் தொழுதார்கள் (புஹாரி).

 

2. மக்காவை வெற்றி கொள்வதற்காக சென்ற வேளை 19 நாட்கள் அங்கே தங்கியிருந்தார்கள், அனைத்து நாட்களும் சுருக்கித் தொழுதார்கள் (புஹாரி).

 

3. தபூக் யுத்தத்துக்காக சென்ற போது அங்கே 20 நாட்கள் தங்கியிருந்தார்கள். அனைத்து நாட்களும் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் (அபூதாவூத்).

 

இதற்கு மேலதிகமாக, ஸஹாபாக்களின் நடைமுறைகளை நோக்கும் போது அவர்கள் மிக நீண்ட காலத்திற்கு தமது பயணங்களில் சுருக்கித் தொழுதிருக்கிறார்கள் என்பதை காண முடிகிறது :

 

1. அனஸ் (றழி) அவர்கள் ஷாமிலே கலீபா அப்துல் மலிக் பின் மர்வானுடன் இரண்டு மாதங்கள் தங்கியிருந்தார்கள். அனைத்து நாட்களும் நான்கு றக்அத் தொழுகைகளை இரண்டாக சுருக்கியே தொழுதார்கள் (முஸன்னப் இப்னு அப்திர் ரஸ்ஸாக்).

 

2. ஸஹாபாக்களில் ஒரு குழுவினர் றாமஹுர்முஸ் பிரதேசத்தில் 09 மாதங்கள் தங்கியிருந்தார்கள். அத்தனை நாட்களும் சுருக்கியே தொழுதார்கள் (பைஹகி). (இது ஆதாரபூர்வமானது என இமாம் நவவி, ஹாபிழ் இப்னு ஹஜர் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்).

 

3. அபூஜம்ரா அவர்கள் இப்னு அப்பாஸ் (றழி) அவர்களிடம் ‘குராஸான் பிரதேசத்தில் யுத்தத்துக்காக நீண்ட காலம் தங்க வேண்டியேற்படுகிறது, எவ்வாறு நாங்கள் தொழுவது?’ என்று கேட்ட போது இப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் ‘பத்து வருடங்கள் தங்கியிருந்தாலும் தொழுகைகளை சுருக்கித் தொழுதுகொள்’ எனக் கூறினார்கள் (முஸன்னப் இப்னு அபீஷைபா).

 

4. அப்துர் ரஹ்மான் பின் ஸமுறா (றழி) அவர்களோடு சில தாபிஈன்கள் பாரசீக பிரதேசம் ஒன்றில் இரண்டு வருடங்கள் தங்கியிருந்த போது அவ்வளவு காலமும் தொழுகைகளை சேர்க்காமல் அந்தந்த தொழுகை நேரம் வந்தவுடன் நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கி மாத்திரம் தொழுதுவந்தார்கள் (முஸன்னப் இப்னு அப்திர் ரஸ்ஸாக்).

 

இவை போன்ற ஸஹாபாக்களின் நடைமுறைகள் இன்னும் பல உள்ளன.

 

இவ்விடயம் தொடர்பில் இமாம் இப்னு தைமியா (றஹ்) அவர்களின் கருத்து நோக்கத்தக்கதாகும் :

 

“பயணத்துடன் தொடர்பான மார்க்க சட்டங்கள் அப்பயணம் முடிவடையாமல் நிறைவுபெறமாட்டாது. பயணம் என்பது ஒருவர் தனது வதிவிடத்தை பிரிந்திருப்பதாகும். ஒருவர் தனது வதிவிடத்தை பிரிந்து தன் ஊர் திரும்பும் வரை பிரயாணியாகவே கருதப்படுவார். தொழில் நிமித்தமோ, வேறு தேவைகளுக்காகவோ தன் வதிவிடத்தை பிரிந்து குறிப்பிட்ட சில காலங்களுக்கு வேறு ஓர் இடத்தில் தங்கியிருக்கும் வரை பிரயாணிக்கான சட்டங்கள் இருக்கவே செய்யும்”. (பார்க்க : ‘பதாவா இப்னு உதைமீன்’, 15/348, 354)

 

எனவே, தொழில், கல்வி மற்றும் வேறு தேவைகளுக்காக பிற பிரதேசங்களில், நாடுகளில் தங்கியிருப்போர் அங்கிருக்கும் காலம் முழுவதும் நான்கு றக்அத் தொழுகைகளை சுருக்கித் தொழுவதற்கு அனுமதி உண்டு என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

அல்லாஹு அஃலம்.

 

(இன் ஷா அல்லாஹ் தொடரும்…)

 

ஆக்கம்:ஏ.ஆர்.எம் ரிஸ்வான் (ஷர்கி) M.A

 

முந்தைய தொடரை வாசிக்க 

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply