ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்களின் கருத்துகள்

ஷஃபான் பராத் விஷேட அமல்கள் பற்றி ஷாபி மத்கப் அறிஞர்கள்

 

பராத் தினமென்று அழைக்கப்படும் ஷஃபானின் 15ம் தினத்தில் விஷேட நோன்பு நோற்று, இரவு நேரங்களை விஷேட வணக்க வழிபாடுகள் மூலம் உயிர்ப்பிக்கலாம், மார்க்கத்திலும் ஷாபி மத்கபிலும் அதற்கு ஆதாரமுண்டு, வஹ்ஹாபிகள் என்போர்தான் அதனை மறுக்கின்றனர் என சிலர் பிரச்சாரம் செய்துவருவதை அவதானிக்க முடிகின்றது.

 

ஆனால் உண்மையில் ஷாபி மத்கபில் கூட இவற்றுக்கு அனுமதி கிடையாது. முக்கிய அறிஞர் இப்னு ஹஜர் ஹைதமி ரஹ் அவர்களின் பிரதான நூலான الفتاوى الفقهية الكبرى என்ற நூலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

 

அதன் சுருக்கமான மொழிபெயர்ப்பை இங்கு நாம் வழங்குகின்றோம்.

 

கேள்வி:

 

ஷெய்க் அவர்களே! இப்னு மாஜாவில் இடம்பெறும் ஷஃபானுடைய நடுப்பகுதி வந்துவிட்டால் அதன் பகலில் நோன்பு நோற்று, இரவில் நின்று வணங்குங்கள் என்ற ஹதீஸின் படி அந்நாளில் நோன்பு நோற்பது விரும்பத்தக்கதா? இல்லையா? குறித்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதா? இல்லையா? விரும்பத்தக்கது என நீங்கள் கூறினால் ஏன் மார்க்க சட்ட அறிஞர்கள் அதனைக் குறிப்பிடுவதில்லை? அதன் இரவில் நின்று வணங்குவதன் நோக்கம் என்ன? அது பராத் தொழுகையா இல்லையா?

 

பதில் :

 

நவவி ரஹ் அவர்கள் மஜ்மூஃ என்ற நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருப்பதன் படி, ரஜப் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையன்று மஃரிப் இஷாவுக்கு இடையில் தொழப்படும் 12 ரக்அத்களைக் கொண்ட ரஙாஇப் رغائب தொழுகை, ஷஃபான் மாத நடுப்பகுதியில் தொழப்படும் 100 ரக்அத் தொழுகை ஆகிய இரண்டும் மோசமான இரு பித்அத்களாகும். கூதுல் குலூப், இஹ்யாஉ உலூமித்தீன் ஆகிய நூட்களில் அவை கூறப்பட்டிருப்பதைப் பார்த்தோ அது சம்பந்தமாக இடம்பெறும் ஹதீஸைப் பார்த்தோ ஏமாந்துவிடக் கூடாது. ஏனெனில் அவை அனைத்தும் பாத்திலாகும். தவறுதலாக சில அறிஞர்கள் அவற்றை ஆதரித்து எழுதியிருப்பதைப் பார்த்தும் ஏமாந்துவிடக்கூடாது. அவர்களும் தவறிலே உள்ளார்கள். இவற்றைத் தவறு என நிரூபித்து இப்னு அப்திஸ்ஸலாம் சிறியதொரு நூலைத் அழகிய முறையில் தொகுத்துள்ளார். இமாம் நவவியும் அவை மோசமான தவறு என விமர்சித்து மிக நீண்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.

 

இது விடயத்தில் இப்னுஸ் ஸலாஹ் அவர்களின் தீர்ப்புக்களில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. அவரது இன்னொரு பத்வாவில் குறித்த இரு தொழுகைகளும் பித்அத்தாக இருந்தாலும் தொழுமாறு இடம்பெற்றுள்ள பொதுக்கட்டளையில் அது நுழைந்துவிடும் எனக் கூறியுள்ளார்.

ஆனால் இமாம் ஸுப்கி அதனை மறுத்து தொழுமாறு வந்துள்ள பொதுக்கட்டளையை வைத்து பிரத்யேகமான ஒன்றைச் செய்ய முடியாது. பொதுவாக வந்த ஒன்றுக்கு காலம், இடம் போன்றவற்றைப் பிரத்யேகமாக ஏற்படுத்தினால் அது பித்ஆவில் நுழைந்துவிடும். பொதுவாக வந்தவற்றை அவ்வாறே விட்டுவிட வேண்டும்.

 

எனவே இவ்வாறான தொழுகைகளை தனியாகவோ கூட்டாகவோ நிறைவேற்றுவதை விட்டும் தடுப்பது கட்டாயக் கடமையாகும். பொது மக்கள், வணக்கசாலிகளிடம் காணப்படும் குறித்த தொழுகைகள் முக்கிய சுன்னத் என்ற எண்ணத்தை நீக்கவேண்டும்.

இதுதான் ஷஃபானின் நடுப்பகுதி இரவுத் தொழுகையின் சட்டமாகும்.

 

ஷஃபான் 15ம் தின நோன்பைப் பொருத்தவரை, வெள்ளை நாட்கள் ( அய்யாமுல் பீல்) நோன்பு என்ற வகையில் நோற்க முடியுமே தவிர பிரத்யேகமாக நோற்க முடியாது.

 

சுருக்கம் என்னவெனில் இந்த இரவுக்கு ஒரு சிறப்பு உண்டு, அதில் பிரத்யேகமாக பாவமன்னிப்பு மற்றும் துஆ ஏற்றுக்கொள்ளப்படும். இதனால்தான் ஷாபிஈ (ரஹ்) அதில் துஆ ஏற்றுக்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளார்கள். பிரச்சினை அவ்விரவில் தொழப்படும் பிரத்யேகமான தொழுகையில்தான். அது மோசமான பித்அத் அதனைச் செய்பவரைத் தடுக்க வேண்டும் என்பதை ஏற்கனவே பார்த்துள்ளோம். ஷாம் தேசத்தைச் சேர்ந்த தாபிஈன்கள் அவ்விரவைக் கண்ணியப்படுத்தி அதில் அதிக வணக்கவழிபாடுகளைச் செய்திருப்பாக வந்திருந்த போதிலும் சரியே. அவர்கள் அவ்விரவில் பித்அத்தாக உருவாக்கியதைத்தான் மக்களும் செய்துவருகின்றனர். இதற்கு எவ்வித சரியான ஆதாரமும் இல்லை. யூத கிறிஸ்தவ கூறுக்களை வைத்தே இதனை அவர்கள் செய்கின்றனர் எனக் கூறப்படுகின்றது. எனவேதான் ஹிஜாஸ் பிரதேசத்தின் அதிகமான அறிஞர்களும் மதீனாவின் சட்டஅறிஞர்களும் அதனைத் தடுத்தார்கள். அதுவே ஷாபிஈ, மாலிக் போன்ற இமாம்களின் மாணவர்களது கருத்துமாகும். நபியவர்களோ அவர்களின் தோழர்களில் எவருமோ செய்யவில்லை என்பதனால் இவை அனைத்தும் பித்அத்களோகும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

 

📚 الفتاوى الفقهية الكبرى (2/ 80)

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply