மழை காலத்தில் அதானும் தொழுகையும்

மழை காலத்தில் அதானும் தொழுகையும்

 

இஸ்லாம் பின்பற்ற இலகுவான இயற்கையான மார்க்கமாகும் அதனை கஷ்டபடுத்தி கொள்வதை ஒரு போதும் அல்லாஹ் விரும்பவில்லை பல சந்தர்ப்பங்களில் ஒரு சில சலுகைகளை இந்த மார்க்கம் அதன் பொது விதியிலிருந்து நீங்கி எங்களுக்கு வழங்குகின்றது அப்படியான சலுகைகளை முழுமையாக பயன்படுத்துவது தான் நபி ஸல் அவர்கள் எங்களுக்கு காட்டிதந்த வழிமுறையாகும்.

 

உதாரணமாக:

பிரயாணத்தை இஸ்லாம் சிரமமான ஒன்றாக பார்ப்பதினால் அதில் தொழுகையை பாதி அளவு சுருக்க மற்றும் நோன்பை விட்டு விட்டு வேறு நாளில் பிடிக்க, அதே போல் ஜும்ஆவை விட அனுமதித்துள்ளது இந்த சலுகைகளை நபி ஸல் அவர்களும் நபித்தோழர்களும் பயன்படுத்தி இருப்பதை ஹதீஸ்களில் நாம் பார்க்க முடிகின்றது அது போல் நோயை இஸ்லாம் சிரமமாக பார்ப்பதினால் தொழுகை , நோன்பு போன்ற கடமையான வணக்கங்களில் நோயாளர்களுக்கு பல சலுகைகளை வழங்குவதை பார்கின்றோம். இப்படி இஸ்லாம் பல சந்தர்ப்ப சூழ்நிலைகளில் எங்களுக்கு எண்ணற்ற சலுகைகளை வழங்குகின்றது இஸ்லாம் வழங்கும் அந்த சலுகைகளை முழுமையாக நாம் பயன்படுத்த முயற்சி செய்ய வேண்டும் இவற்றை பயன்படுத்தாது தங்களைத் தாங்களே சிரமப்படுத்தி கொள்வதை இஸ்லாம் தடுக்கிறது.

 

அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை.’

(சூராபகரா 286)

 

يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

 

‘அல்லாஹ் உங்களுக்கு இலகுவாக்க விரும்புகிறானே தவிர, கஷ்டத்தை(க் கொடுக்க) விரும்பவில்லை.’

(சூராபகரா 185)

 

69. ‘இலகுவாக்குங்கள்; சிரமத்தைக் கொடுக்காதீர்கள். மேலும் நல்லவற்றையே சொல்லுங்கள். சலிப்படைந்து ஓடிவிடுமாறு செய்யாதீர்கள்; வெறுப்பூட்டாதீர்கள்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 3. கல்வியின் சிறப்பு

 

இஸ்லாம் வழங்கியுள்ள சலுகைகளில் பல இடங்களில் இன்று நடைமுறை படுத்தபடாத மறைந்து போன சுன்னாவாக மழைகால அதான், மற்றும் தொழுகை இருப்பதை பார்கின்றோம்.

 

1) மழை கால அதானும் கடமையான தொழுகையை வீடுகளில் தொழுது கொள்ள அனுமதியும்

 

1244. அப்துல்லாஹ் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 

மழை பெய்துகொண்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் தொழுகை அறிவிப்பாளரிடம், அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ்… அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்று கூறியதும்

“ஹய்ய அலஸ் ஸலாஹ்” (தொழுகைக்கு வாருங்கள்) என்று கூறாமல், “ஸல்லூ ஃபீ Bபுயூத்திக்கும்” (உங்கள் இல்லங்களிலேயே தொழுதுகொள்ளுங்கள்) என்று கூறுவீராக!” என்றார்கள்.

 

இ(வ்வாறு அவர்கள் கூறிய)தை மக்கள் ஆட்சேபிப்பதைப் போன்றிருந்தது. அப்போது இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “இ(வ்வாறு நான் கூறிய)தைக் கேட்டு நீங்கள் வியப்படைகிறீர்களா? என்னை விடச் சிறந்தவர் (நபி (ஸல்) அவர்கள்) இவ்வாறு தான் செய்தார்கள்.

ஜுமுஆ(த் தொழுகை) கட்டாயக் கடமையாகும் (அத்தொழுகைக்கு வாருங்கள் என்று கூறப்பட்டுவிட்டால் சிரமத்தோடு நீங்கள் வரவேண்டியதாகிவிடும்). நான் உங்களைச் சேற்றிலும் சகதியிலும் நடக்க விட்டு உங்களுக்குச் சிரமம் கொடுக்க விரும்பவில்லை (எனவேதான், இல்லங்களிலேயே தொழச் சொன்னேன்)” என்று கூறினார்கள்.

ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 6. பயனிகள் தொழுகையும் சுருக்கத் தொழுகையும்

 

666 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ قَالَ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ أَذَّنَ بِالصَّلَاةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ ثُمَّ قَالَ *أَلَا صَلُّوا فِي الرِّحَالِ* ثُمَّ قَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ الْمُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ يَقُولُ أَلَا صَلُّوا فِي الرِّحَالِ رواه البخاري

 

குளிரும் காற்றும் நிறைந்த ஓர் இரவில் இப்னு உமர் (ரலி) அவர்கள் பாங்கு சொன்னார்கள். பிறகு “ஓர் (முக்கிய) அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே நீங்கள் தொழுது கொள்ளுங்கள்” (அலா! ஸல்லூ ஃபிர் ரிஹால்) என்று அறிவிப்புச் செய்தார்கள். பின்னர், “(கடுங்) குளிரும் மழையுமுள்ள இரவுகளில் “ஓர் அறிவிப்பு! (உங்கள்) இருப்பிடங்களிலேயே தொழுது கொள்ளுங்கள்” என்று அறிவிக்குமாறு பாங்கு சொல்பவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பணிப்பார்கள்” என்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 

நூல் : புகாரி 666

 

மேலும் “ ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் சென்றுகொண்டிருந்த போது மழை பெய்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் யார் விரும்புகிறாரோ அவர் தமது இருப்பிடத்திலேயே தொழுதுகொள்ளட்டும்!” என்று கூறினார்கள். முஸ்லிம் 1243

 

மழைகாலங்களில் மஸ்ஜிதுக்கு வருகை தருவது சிரமமான காரியம் என்பதால் இஸ்லாம் வீடுகளில் தொழுதுகொள்ள எங்களுக்கு அனுமதி தந்ததுள்ளது இந்த சலுகையை நாம் பயன்படுத்துவதுடன் எமது மஸ்ஜித்களிலும் இந்த அதான் முறை நடைமுறைக்கு வர வேண்டும்

 

2) தொழுகையை ஜம்உ செய்வதற்கு அனுமதி

 

1151و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ح و حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ وَاللَّفْظُ لِأَبِي كُرَيْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ كِلَاهُمَا عَنْ الْأَعْمَشِ عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَمَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاءِ بِالْمَدِينَةِ فِي غَيْرِ خَوْفٍ وَلَا مَطَرٍ فِي حَدِيثِ وَكِيعٍ قَالَ قُلْتُ لِابْنِ عَبَّاسٍ لِمَ فَعَلَ ذَلِكَ قَالَ كَيْ لَا يُحْرِجَ أُمَّتَهُ وَفِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ قِيلَ لِابْنِ عَبَّاسٍ مَا أَرَادَ إِلَى ذَلِكَ قَالَ أَرَادَ أَنْ لَا يُحْرِجَ أُمَّتَه رواه مسلم

 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவில் லுஹ்ரையும், அஸ்ரையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள்; மக்ரிபையும், இஷாவையும் சேர்த்து ஒரே நேரத்தில் தொழுதார்கள். அப்போது அச்சமோ மழையோ இருக்கவில்லை.வகீஉ என்பவரின் அறிவிப்பில், நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு ஏன் செய்தார்கள்?’ என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் “தம் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தார்கள்)” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

 

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

 

நூல் : முஸ்லிம்

 

மழை அச்சம் போன்ற காரணம் இல்லாமல் வேறு காரணத்துக்காக உள்ளூரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை ஜம்மு செய்திருக்கும் போது மழை அச்சம் கலவரம் , பலத்த காற்று , கடும் வெப்பம் , கடும் குளிர் போன்ற மக்களுக்கு சிரமமாக உள்ள கால நிலைகளில் தாராளமாக இச்சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை இந்த நபி மொழியில் இருந்து நாம் விளங்கிக்கொள்ள முடிகின்றது.

 

முடிவுரை:

 

1)ஐந்து நேரத் தொழுகையையும் ஜமாஅத்தாக நிறை வேற்ற வேண்டும் என்று கடமையாக்கிய றப்புல் ஆலமீன் தான் மழைகாலத்தில் உங்கள் இருப்பிடங்களில் தொழுதுகொள்ள அனுமதியளித்துள்ளான்.

 

2) மழை காலங்களில் அதான் கூறும் போது முஅத்தின் “உங்கள் வீடுகளில் நீங்கள் தொழுங்கள்” என கூறுவது சுன்னாவாகும்.

 

3)மழைக்கு முன் மஸ்ஜிதகளுக்கு வந்து சேர்ந்தோருக்கு இமாம் தொழுகை நடத்துவார்.

 

4) தொடர் மழையாக இருக்கும் போது மழையின் அளவைக் கவனத்தில் கொண்டு இமாம் ளுஹருடன் அஸரை / மக்ரிபுடன் இஷாவை ஜம்உ செய்வார்.

 

5) மஸ்ஜிதில் இமாம் தொழுகையை சேர்த்து தொழுவிப்பார் என்பதற்காக மழையின் போது வீட்டில் தொழாமல் மஸ்ஜிதுக்கு வருகை தருவது சரியான விடயமில்லை.

 

6) எந்த சூழ்நிலையில் சேர்த்தித் தொழுவது என்ற முடிவை மஸ்ஜித் நிர்வாகமும் இமாமும் தான் தீர்மானிக்க வேண்டும்.

 

அல்லாஹு அஃலம்

 

_✍தொகுப்பு_

அல் ஹாபிழ் இன்திகாப் உமரி

 

➖➖➖➖➖➖➖➖➖➖➖

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

Leave a Reply