முஸ்லிம் ஹீரோக்கள் – டர். அப்துர்ரஹ்மான் அஸ் ஸுமைத்

-உஸ்தாத் SM. இஸ்மாயில் நத்வி

நாம் சீரான கல்வியைப் பெற்று, தாக்கமும் அடைந்து, அறிவு வளர்ச்சியை பெறுகின்றோம். ஆனால், இதற்குப் பிறகு, நம்மில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்ன ?

அதைத் தான், இன்றைய சமூகம்
இழந்து தவிக்கின்றது.
இஸ்லாமிய விழுமியங்களைக் கொண்ட, ஒரு சமூக மாற்றத்திற்கான ஆளுமைத் திறன்களை, விதைக்க மறந்த விளைவே, இன்றைய இஸ்லாமிய சமூகத்தின் சீர்கேடுகளுக்கு மூல காரணம் எனலாம் !!

இதைத் தான் டாக்டர். அப்துர் ரஹ்மான் அஸ்ஸுமைத் (ரஹ்)
(பிறப்பு-இறப்பு -1947-2013.)
மாற்றியமைத்து , வரக்கூடிய இளம் தலைமுறைகளின் சமூக மாற்றத்திற்கான, ஒரு முன்னோடியான மருத்துவராக, அவர்கள் திகழ்ந்தார்கள் !!

வளைகுடா நாடான, குவைத்தைச் சேர்ந்தவரும், மல்டி மில்லினியருமான, டாக்டர் அவர்கள், லன்டணில் இருக்கும் லிவர்பூல் பல்கலைகழகத்தில் பயின்றவரும், internal medicine specialist ( உள் நிவாரண நிபுணர் ) ஆகவும் இருந்து, அவர்கள் ஆற்றி இருக்கின்ற பணிகள், சராசரியான ஒரு மனிதர் செய்ய கூடிய ஒன்று அல்ல. மாறாக, இறையருள் பெற்ற, இஸ்லாமிய ஆளுமைத் திறன்களை கொண்ட ஒருவரால் தான் முடியும் என்பதனை தான், டாக்டர்
அஸ்ஸுமைத் அவர்களின் வாழ்க்கை, நமக்கு பாடமாகவும், நம் சிந்தனைக்குத் தெளிவையும் வழங்குகின்றது.

அவர் ஒரு தடவை ஆப்பிரிக்காவில், ஒரு புதிய பள்ளிவாயில் ஒன்றைத் திறப்பதற்காக அழைக்கப்பட்டு, அங்கு போன பின், முதல் சந்திப்பில், அவர்கள் கண்டு
கவலை கொண்ட ஒரு விடயம் என்ன
தெரியுமா?

பாங்கு சொல்லப்பட்டும், தொழுகைக்காக மக்கள் வராதது தான். அதன் காரணம் என்ன தெரியுமா?

தொழுவதற்காக மட்டுமல்ல, அணிவதற்காக கூட அவர்களிடத்தில்
போதுமான ஆடையே இல்லை !!

இந்த நிகழ்வுதான், டாக்டர் அவர்களை மிகவும் பெரிதாக பாதித்தது !

அவர்களின் உடன் பிறந்த சகோதரி நூரிய்யா ஹமூத் அஸ்ஸுமைத் அவர்கள் எழுதிய புத்தகமான
“எனது சகோதரர் அப்துர் ரஹ்மான் “, அதுபோல் –
இன்னும் ரஸ்மிய்யா ஷம்ஸு அவர்கள் எழுதிய ” சஹாபா காலத்து மனிதர்”, அபுல் ஹைதம் அவர்களின் ” கடந்து கொண்டிருக்கும் விண்மீன் “,
இன்னும் உஸ்தாத் ஜிஹாத் அத்துர்பானுயின் 100 இஸ்லாமிய ஆளுமைகள் என்ற புத்தகங்கள், டாக்டர் அவர்களின் இஸ்லாமிய சமூக சேவைகளை, படம் பிடித்து காட்டுககின்றன.

டாக்டர் அவர்கள் கூறுகிறார்கள் :

” என்னைப் படைத்தவனுக்கு, நான் புரிய வேண்டிய கடமைகளின்
குறைபாட்டினை, மிக வேதனையுடன் அறியக் காரணமாக இருந்த பல நிலைமைகளை, நான் ஒவ்வொரு நாளும் கடந்து சென்றேன்.

ஒரு நாள், நான் இறை அழைப்புப் பணிக்காக, வெளிக்கிளம்பி சென்றதை நினைவு கொள்கின்றேன். அப்பொழுது, நான் பசியையும்,தாகத்தையும் உணர ஆரம்பித்தேன் (சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டிருந்ததால்). என்னிடம், அத்தருணத்தில் ஒரு மிடறு தண்ணீரோ , ஒரு கவளம் உணவோ கூட இல்லை ….

தாகத்தின் உச்சக்கட்டத்தில், வாகனங்கள் மிதித்து சென்ற குழிகளில் தேங்கி இருந்த, மழைத் தண்ணீரை பருக எத்தணித்தேன். அத்தருணத்தில், தண்ணீர் – சகதியினால் சூழப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தண்ணீரும் இன்றி, மழை இல்லாத காரணத்தினாலும் ,வறண்ட ஆறுகளினாலும் – சிலர் மரணிக்கின்றதை கண்ட பொழுது, எனக்கு இறைவன் வழங்கி இருக்கின்ற அந்த அருட்கொடைகளை உணரலானேன்.
பிறகு எனக்கும் , என்
மனைவி, மக்களுக்கு முன்பாக நூற்றுக்கணக்கான குழந்தைகள், பசியின் கொடுமையால் மரணித்தார்கள். ஆனால், இவர்களை நாங்கள் முன்பே கண்டிருந்தோம் என்றால் , இவர்களை காப்பாற்ற ஒரு வேளை பசி ஆற, வெறும் 16 பைசா தான் எங்களுக்கு தேவையாக இருந்திருக்கும்.

வறுமை கோட்டிற்கு கீழ் தள்ளபட்ட ஆப்ரிக்கர்களின் இவ்வுலக வாழ்க்கையின் சுவாசத்திற்கும் , என்றும் அழியாத மறுமை வாழ்கைக்கும் வழிவகுக்கும் விதத்தில், இந்த கோடீஸ்வர குவைத் அரபி, தன்னை மாற்றிக் கொண்டு, தனது சொகுசான ஆடம்பர வாழ்க்கையைத் தூக்கி எறிந்து விட்டு, தனது துணைவியாருடன்
ஆப்ரிக்காவில் இருக்கும் மடகாஸ்கரில், 29 வருடம் தஃவா
(இறைவனின் பக்கம் மக்களை அழைக்கும் அழைப்பு பணியை ) பணியை செய்ததின் விளைவு இதோ, இந்த மாற்றங்கள் !!!

‘ஜம்யிய்யா அவ்னுல் முபாஸிர்’ என்ற அறக்கட்டளையை நிறுவி, இந்த பணிகளை, அவர்கள் ஆற்றியுள்ளார்கள்,?

 ஆப்பிரிக்காவில், பல பகுதிகளில் 11 மில்லியன் மக்கள்
இஸ்லாத்தை ஏற்றார்கள் (ஒரு கோடியே பத்து இலட்சம் .

6 மில்லியன் (அறுபது இலட்சம்) அல்குர்ஆன் பிரதிகளை இலவசமாக வழங்கியிருக்கின்றார்கள் .

860 பள்ளிக்கூடங்கக் கட்டிக் கொடுத்து இருக்கின்றார்கள்.

4 பல்கலைகழகங்களை கட்டி இருக்கின்றார்கள்.

 9,500 கிணறுகளைத் தோண்டிக் கொடுத்திருக்கிறார்கள்.

 204 இஸ்லாமிய நிலையங்களை அமைத்து கொடுத்துள்ளார்கள் .

124 மருத்துவ மனைகளைக் கட்டி தந்திருக்கின்றார்கள்

 840 குர்ஆன் பாடசாலைகள்

5,700 பள்ளிவாசல்கள்

95,000 முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி.

15,000 அனாதைகளை அரவணைத்திருக்கின்றார்கள்.

இவைகள் அனைத்துமே, இவர்களின் மீது நமக்கு பொறாமையை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், “நமக்கு இறைவன் வழங்கி இருக்கின்ற அத்துனை அருட்கொடைகளையும் நாம் முறைப்படி பயன்படுத்துகின்றோமா ?”
என்ற கேள்விகளை, நம் ஆழ்மனதில் ஏற்படுத்துகின்றது !!

இவர்களைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை, அல்ஜஸீரா தொலைக்காட்சி நிறுவனம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சேவைகளை, வல்ல இறைவன் கபூல் செய்து , சஹாபாக்களில் செய்யதுனாஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், செய்யதுனா உமர் பின் அல்கத்தாப் , இன்னும் செய்யதுனா அபூபக்கர் சித்தீக் (ரலியல்லாஹு அன்ஹும் ) அவர்களின் இந்த ஈகை குணங்களை, நம்முடன் வாழ்ந்துச் சென்ற டாக்டர் அவர்கள் போல், கல்வி-தாக்கம்-மாற்றம் இவைகளை ஏற்படுத்தும் எழுச்சிக் கொண்ட சமூகத்தை
நாமும் விதைப்போமா !!


 

 

AbdurRahman As Sumait

இஸ்லாமிய நூல்கள் வாங்க

Whatsapp மூலம் எங்கள் பதிவுகளை உடனுக்குடன் பெற்றுக்கொள்ளுங்கள்:

 

Leave a Reply

%d